இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: அலங்காநல்லூரில் 5 மணி நேரத்திற்கு மேல் போராட்டம்

அலங்காநல்லூரில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2017-01-17 07:51 GMT

அலங்காநல்லூர்,



தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும்  ஊர்பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 21 மணி நேரமாக ஜல்லக்கட்டு நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூரில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். விடிய, விடிய நடந்த போராட்டத்துக்கு பின்னர் போலீசார் 10 நிமிட அவகாசம் கொடுத்தனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டதால் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் அணி அணியாக திரண்டு அலங்காநல்லூர் வந்தனர். அங்குள்ள வாடிவாசல் அருகே பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டதால் மீண்டும் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  விஜயேந்திர பிதாரி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், கைதான இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.  அவர்கள் மீதான   வழக்கை வாபஸ்  பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  இதற்கு பதில் அளித்த  போலீஸ் சூப்பிரண்டு, கைதானவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால் அதனை பொதுமக்கள்  ஏற்க மறுத்து விட்டனர். இதனால் சுமார் 10 நிமிடம் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது
.
அலங்காநல்லூர் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் 38-பேர் விடுவிக்கபட்டு உள்ளதாக  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்