எட்டயபுரத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள், கார் அடுத்தடுத்து மோதல்; வாலிபர் பலி

எட்டயபுரத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள், கார் அடுத்தடுத்து மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2023-07-14 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள், கார் ஆகியவை அடுத்தடுத்து மோதிவிபத்துக்குள்ளானதில், வாலிபர் பலியானார். மேலும், 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

பள்ளிகுழந்தைகள்

எட்டயபுரம் அருகே உள்ள படர்ந்தபுளி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் மகேந்திரன் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலையில் தனது அண்ணன் குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட்டிக்கொண்டு ஊருக்கு எட்டயபுரம்- விளாத்திகுளம் செல்லும் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்

பாரதி கூட்டுறவு நூற்பாலை அருகே சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மகேந்திரன், அவரது அண்ணன் குழந்தைகளான கலா, ஸ்ரீராம் ஆகியோர் கீழே விழந்தனர். அப்போது எதிரே வந்த விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பிச்சைமணி மகன் அகஸ்டின்( 34) என்பவர் ஓட்டிவந்த கார் எதிர்பாராத விதமாக மகேந்திரன் மீது மோதியது.

வாலிபர் சாவு

இதில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் குழந்தைகள் கலா, ஸ்ரீராம், மற்றெரு மோட்டார் சைக்கிளில் இருந்த அருள், ஆறுமுகசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த 4பேரும் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பலத்த காயமடைந்த ஸ்ரீ கலா, ஸ்ரீராம் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரன் உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்