வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கு - சிறுவன் உள்பட 7 பேர் அதிரடி கைது

வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கில் சிறுவன் உள்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

Update: 2023-07-28 06:25 GMT

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 10 -க்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான சிறுத்தை, மான், யானை, புலி போன்ற பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் பவானிசாகர் அடுத்த தெங்குமரஹாடா செல்லும் வழியில் கொத்தமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொமரத்தூர் வனப்பகுதியில் உள்ள ஒரு ஓடையில் 6 வயது மதிக்கத்தக்க ஆண் புலியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திலேயே மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வனப்பகுதியில் புலியின் உடல் எரியூட்டப்பட்டது.

இந்த நிலையில் உடற்கூறு ஆய்வின் முடிவில் புலி வனப்பகுதியில் மான்கள் மற்றும் பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியால் ஆன கன்னியில் சிக்கியதால் கடந்த 10 நாட்களாக அதிலிருந்து வெளியே தப்பிக்க முடியாமலும், உணவில்லாமலும் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சுசில் குட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ், நாச்சிமுத்து, பத்மகுமார், லோகேஷ் பால், தினகரன், சவுந்தர்ராஜன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வனப்பகுதிகளில் பன்றிகள் மற்றும் மான்களை வேட்டையாட அவ்வப்போது இரும்பு கம்பியால் ஆன கன்னிகளை வைத்து வந்தது தெரிய வந்தது.

இவர்கள் வைத்த கன்னியில் புலி சிக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து வனத்துறையினர் இவர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்