முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் நள்ளிரவில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-09 17:27 GMT

கோப்புப்படம்

மதுரை,

கடந்த வருடம் இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த அணை, ஏரி, குளங்கள் என்று அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவிற்கு நிரம்பி வழிய தொடங்கியது. மேலும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் தாக்கம் பெரும் சேதத்தினையும் ஏற்படுத்தியது.

இந்தவகையில் தற்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைகை அணை, அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2900 கன அடியில் இருந்து 5500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், அணையில் குளிக்கவும், இறங்கவும் வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் நள்ளிரவில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வருடம் தாமதமாக நிரம்பிய வைகை அணை தற்போது மிக வேகமாக நிரம்பியதால் அணையை சுற்றியுள்ள 5 மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்