வியாபாரிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

தேவாரம் அருகே விபத்தில் காயம் அடைந்த வியாபாரிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Update: 2023-10-18 19:45 GMT

தேவாரம் மல்லிங்கர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 56). காய்கறி வியாபாரி. இவர், கடந்த 2016-ம் ஆண்டு கோம்பை மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தேவாரத்தில் இருந்து உத்தமபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் தாறுமாறாக ஓடி அங்குள்ள மின் கம்பங்கள் மீது மோதியது. இதில் மின் கம்பம் ஒன்று உடைந்து வெள்ளைச்சாமியின் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த விபத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் தனக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று உத்தமபாளையம் சப்-கோர்ட்டில் வெள்ளைச்சாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரூ.5 லட்சத்து 76 ஆயிரத்தை போக்குவரத்து கழகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அதன்பின்பும் வெள்ளைச்சாமிக்கு இழப்பீடு வழங்கவில்லை.

இதைத்தொடர்ந்து கடந்த 7.9.2023-ந்தேதி உத்தமபாளையம் சப்-கோர்ட்டில் அவர் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்து, வெள்ளைச்சாமிக்கு ரூ.8 லட்சத்து 11 ஆயிரத்து 650 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கவில்லை என்றால் அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இழப்பீடு வழங்காததால் நேற்று, கம்பம் பஸ்நிலையத்தில் மதுரை செல்ல இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இந்த சம்பவத்தால் பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்