நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

வியாபாரி இறந்த வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து கடலூர் கோர்ட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2023-02-02 18:45 GMT

கடலூர் அருகே மாவடிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் வைத்தியநாதன் (வயது 47). காய்கறி வியாபாரி. இவர் கடந்த 9.9.2014 அன்று புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் மோதி பலியானார். இது பற்றி ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இவ்வழக்கில் நஷ்டஈடு கேட்டு இறந்த வைத்தியநாதன் மனைவி மற்றும் குழந்தைகள் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட வைத்தியநாதன் குடும்பத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.20 லட்சத்து 5 ஆயிரத்து 534-யை நஷ்ட ஈடாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு தொகையை வழங்கவில்லை.

இதையடுத்து அவர்கள் மீண்டும் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி நேற்று கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி செல்ல இருந்த அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்