விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2023-08-01 18:45 GMT

செஞ்சி, 

திருவண்ணாமலையை சேர்ந்தவர் கண்ணன் மகன் காளி (வயது 38). இவர் கடந்த 24.6.2018 அன்று செஞ்சி வட்டம் பாலப்பாடி கூட்டுரோடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி நோக்கி வந்த அரசு பஸ்அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விபத்தில் காளி இறந்ததால், நஷ்டஈடு கேட்டு வக்கீல் சீனிவாசன் மூலம் செல்வி செஞ்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நஷ்டஈடாக அரசு போக்குவரத்து கழகம் ரூ.13 லட்சத்து 82 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி நளினகுமார் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.19 லட்சத்து 45 ஆயிரம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லையெனில் அரசு பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இருப்பினும் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் செஞ்சி கூட்டுரோடு அருகே வந்த குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்