தமிழகத்தில் வெப்பத் தணிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

தமிழ்நாட்டில் வெப்பத்தின் கடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனிவருங்காலங்களில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் வெப்பத்தணிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-04-23 07:48 GMT

இது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும். எனவே, தொலைநோக்கு அடிப்படையில் தமிழ்நாட்டிற்கான வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா முழுவதும் 2024 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மிக அதிக வெப்பம் நிலவும். இயல்பை விட அதிகமான நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும், பல நகரங்களை நகர்ப்புற வெப்பத்தீவு பதிப்பு தாக்கக் கூடும். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் 'ஈரக்குமிழ் வெப்ப நிலை' பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலை சமாளிப்பதற்காகவும், அதிவெப்பத்தை எதிர்கொள்வதற்காகவும் மாநில அளவிலும், மாவட்டங்கள் அளவிலும், ஒவ்வொரு மாநகரம் மற்றும் ஒவ்வொரு நகருக்காகவும், வெப்பத் தணிப்பு செயல் திட்டங்களைஉருவாக்கி செயல்படுத்த வேண்டும். அறிவியல்பூர்வமாகவும், மக்கள் பங்கேற்புடனும், போதுமான நிதி ஆதாரத்துடனும் இதனை போர்க்கால வேகத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டிற்கான வெப்ப அலை செயல்திட்டம் 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த செயல்திட்டம் முழுமையானதாகவும் இல்லை. செயலாக்கப்படவும் இல்லை. தமிழ்நாட்டில் வெப்பத்தை எதிர்கொள்வதற்கான விரிவான திட்டங்கள், வழிகாட்டிகள், அரசாணைகள், நிதி ஆதாரம், பயிற்சிகள், கண்காணிப்பு போன்றவை தேவைப்படும் அளவில் இல்லை.

தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவானது தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கையை 2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது. இந்த திட்டத்தைஉருவாக்குவதற்கான உதவிகளை இங்கிலாந்து அரசு செய்துள்ளது. ஆனால், இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பதை முதலமைச்சராகிய தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தமிழ்நாடு முழுமைக்கும் மற்றும் ஒவ்வொரு மாவட்டம், ஒவ்வொரு நகருக்குமான வெப்பத் தணிப்பு செயல்திட்டங்கள் உடனடியாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். பரவலாக்கப்பட்ட வடிவிலும், மக்கள் பங்கேற்புடனும், காலநிலை தகவமைப்பை முன்னிலைப்படுத்தியும், அனைத்து துறையினரையும் உள்ளடக்கியும் இத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

உள்ளூர் அளவிலான வானிலை முன்னெச்சரிக்கைகள், நகர்ப்புற பசுமையை அதிகமாக்குதல், நீர்நிலைகள் பாதுகாப்பு, குளிர்ந்த கூறைகள் திட்டம், வெப்பத்தை சமாளிக்கும் காற்றோட்டமான கட்டுமானங்கள், மருத்துவ கட்டமைப்புகள், விழிப்புணர்வு பிரச்சாரம், வெப்ப ஆபத்தில் சிக்குவோருக்கான புகலிடங்கள், போதுமான குடிநீர் வசதிகள், போக்குவரத்தில் வெப்பத்தை சமாளித்தல் மற்றும் பொதுப்போக்குவரத்தை அதிகமாக்குதல், அவசர உதவி வசதிகள், பல்துறையினர் பங்கேற்பு, போதுமான நிதி ஆதாரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக வெப்பத் தணிப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இவற்றை செயலாக்குவதற்கான முழுமையான பொறுப்புடைமைவிதிகளை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளை உள்ளடக்கிய வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி கோடைக் கால வெப்பத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு தயாரித்துள்ள வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை உடனடியாக வெளியிட்டு, மக்கள் கருத்துக்களை கேட்டு, முழுமையான ஒரு வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்