கோவில் முன்பு அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருத்தணி அருகே கோவில் முன்பு அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2023-10-14 06:41 GMT

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் மத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் சிலர் ஆக்கிரமித்து சாலையோர கடைகள் வைத்திருப்பதாகவும், இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்ல சிரமமாக இருப்பதாக பொது மக்கள் தொடர்ந்து முருகன் கோவில் நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இது குறித்து ஏற்கனவே அங்கு கடை நடத்தி வந்த உரிமையாளர்களிடம் பல முறை அறிவுறுத்தியும் அதனை பின்பற்றாமல் நடைபாதையில் கடை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி உத்தரவின் பேரில், திருத்தணி வருவாய் ஆய்வாளர் கமல் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி செய்தனர்.

கடை வைத்திருக்கும் இடம் பட்டா உள்ளதாக ஆக்கிரமிப்பாளர்கள் தெரிவித்ததால், சர்வேயர்கள் வரவழைக்கப்பட்டு நில அளவீடு செய்தனர். இதில் கடைகள் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து வருவாய்த்துறையினர், கோவில் ஊழியர்கள் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்