எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் கொள்ளை முயற்சி

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

Update: 2024-02-14 09:41 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் அருண் பிரகாஷ் (வயது 32). இவர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்து வருகிறார்.

இவர் நாரைக்கிணறு தோட்டத்தில் உள்ள வீட்டில் மனைவி அருள் பிரியா (30), மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இதனிடையே, கடந்த 9-ந் தேதி இரவு காரில் வந்த மர்ம கும்பல் தோட்டத்தில் உள்ள அருண் பிரகாசின் வீட்டுக்குள் செல்வதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததுடன், இரும்பு கேட்டை கடப்பாரை, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் உடைத்து உள்ளே சென்று கொள்ளையடிக்க முயன்றது.

சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த அருள் பிரியா வெளியே வந்தார். அப்போது அவர் மர்ம நபர்களை கண்டு கூச்சல் போடவே காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து ஆயில்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் ராசிபுரம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் கார் ஒன்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காரின் எண்ணும் சந்தேகப்படும்படியாக நின்ற காரின் எண்ணும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர்.

பின்னர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று காரை சுற்றிவளைத்தனர். காருக்குள் இருந்தவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தேரியூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் முருகானந்தம் (48), உடன்குடி தேரியூர் வடக்கு தெருவை சேர்ந்த சுயம்புலிங்கம் (25), அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (31), ஜெபக்குமார் (24), உடன்குடி காமராஜர் நகரை சேர்ந்த பார்வதி முத்து (25) என்பதும், இவர்கள் 5 பேரும் பிரகாஷ் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்து ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்