செஸ் உலகக்கோப்பையில் வெள்ளிப்பதக்கம்; பிரக்ஞானந்தாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-24 13:19 GMT

சென்னை,

'பிடே' உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.

இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. அதே போல் 2-வது சுற்று ஒன்றரை மணி நேரத்தில் 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற்ற டை-பிரேக்கர் ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சென் வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்த நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உலகக் கோப்பை செஸ் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய, சென்னையின் பெருமையாக விளங்கும் பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் முன்னனி செஸ் வீரர்கள் நகமுரா மற்றும் காராவ்னா ஆகியோரை வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தாவின் சாதனை 140 கோடி கனவுகளுடன் எதிரொலிக்கிறது என்றும், முழு தேசமும் அவரை நினைத்து பெருமை கொள்கிறது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

Tags:    

மேலும் செய்திகள்