பெண் மர்மச்சாவு

கம்பத்தில் வீட்டில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Update: 2023-03-02 18:45 GMT

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியை சேர்ந்தவர் அமுதா (வயது 45). நேற்று காலை வெகுநேரமாகியும் அமுதாவின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு படுக்கை அறையில் அமுதா நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி, கம்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அமுதாவின் உடலில் காயங்கள் இருந்தன. இதனால் அவரை யாராவது அடித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். பின்னர் அமுதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அமுதா மர்மமான முறையில் இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்