'ஒரு கப் டீ, கட்டிப்பிடி வைத்தியம்' முடிவுக்கு வந்த மோதல்: அரசு பஸ் நடத்துனர் - காவலர் இடையே சமரசம்

நாங்குநேரி அரசு பஸ் நடத்துனர் - காவலர் இடையே டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட மோதல் மாநில அளவில் எதிரொலித்தது.

Update: 2024-05-25 12:00 GMT

நெல்லை,

நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் நாங்குநேரியில் ஏறிய காவலரிடம் டிக்கெட் எடுக்கும்படி நடத்துனர் கேட்டுள்ளார். ஆனால், டிக்கெட் எடுக்க காவலர் மறுத்தார். காவலர் பணியில் இருப்பவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று கூறி வாக்குவாதம் செய்தார். இதையடுத்து, நடத்துனரும், காவலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பயணி தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த அரசுப் போக்குவரத்துக் கழகம், "அரசு பஸ்களில் காவலர்கள் இலவசமாக பயணிக்க முடியாது. அதற்கான அனுமதி வாரண்ட் இருந்தால் மட்டும்தான் பயணிக்க முடியும்" என்று கூறியது.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தலைநகர் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அரசு பஸ்களுக்கு எதிராக போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

ஒருவழிப் பாதையில் பயணித்தல், சீருடை அணிவதில் குறைபாடு, நிறுத்தத்தைத் தாண்டி நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி அரசுப் பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. அரசு பஸ்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையில், காவலர்களின் இலவச பயணம் குறித்த போக்குவரத்துக் கழக அறிவிப்புக்குப் பிறகு, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் சர்ச்சை அதிகரித்தது.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து ஊழியர்கள் - போலீசார் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.

இந்நிலையில், டிக்கெட் எடுப்பதில் மோதலில் ஈடுபட்ட அரசு பஸ் நடத்துனரும் காவலரும் சமரசம் செய்துகொண்டனர். காவலரும் நடத்துனரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஆரத்தழுவி கட்டியணைத்து சமரசம் செய்துகொண்டனர். பின்னர், போக்குவரத்து மற்றும் போலீஸ் ஆகிய 2 துறைகளும் இனி நண்பர்களாக பணியாற்றுவோம் என்று இருவரும் உறுதியளித்தனர். பின்னர், இருவரும் ஒன்றாக டீ குடித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விதிகளை மீறி செயல்பட்டதாக அரசு பஸ்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு தொடர்ந்து அபராதம் விதித்து வந்த நிலையில் அந்த நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

Tags:    

மேலும் செய்திகள்