மீஞ்சூரில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு

மீஞ்சூரில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Update: 2023-10-06 09:13 GMT

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ராமநாதபுரம் கிராமத்தில் வசிப்பவர் கஸ்தூரி (வயது 55). இவர் மேலூர் ஆரம்பப்பள்ளி சத்துணவு மைய அமைப்பாளராக வேலை செய்து வருகின்றார்.

நேற்று மதியம் மீஞ்சூரில் உள்ள வங்கியில் ரூ.1 லட்சத்தை கஸ்தூரி எடுத்தார். பின்னர் தனக்கு பணம் எடுக்க உதவியவருக்கு அதற்கான பணத்தை கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் மீஞ்சூர் பஜாருக்கு வந்தார்.

அங்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு பணம் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வைத்த பணத்தை எடுக்க மோட்டார் சைக்கிளில் உள்ள இருக்கை அறையை திறந்தார்.

அங்கு ரூ.1 லட்சம் இல்லாததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். அவர் வங்கிக்கு சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்திய இடத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அவர் தனது மகன் மோகனுக்கு தகவல் தெரிவித்தார். அவரும் பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை.

இதுகுறித்த அவர்கள் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கி அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்