மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நீக்கம் செல்லும் - ஐகோர்ட்டு மதுரை கிளை

அதிமுக ஆட்சியில் மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நீக்கம் செல்லும் என ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-10-17 12:45 GMT

மதுரை,

மதுரை, விருதுநகர், திருச்சி ஆவினில் கடந்த 2019ம் ஆண்டு பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு நடைப்பெற்றது. அதன் பின்னர் மதுரை, விருதுநகர் ஆவினில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் பணிநியமனம் செய்த பணியாளர்கள் நியமனத்தை அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்களை மீண்டும் பணி நியமனம் செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது, மதுரை ஆவினில் மட்டும் பணிநியமனம் செய்யப்பட்ட 47 பேருக்கு நடைப்பெற்ற எழுத்துத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.  எழுத்துத்தேர்வு முடிந்ததும் தேர்வு முடிவுகளை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு நியமனம் செய்ய வேண்டியவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்றுள்ளதாக நீதிபதிகள் கூறினர்.

இதன் காரணமாக மதுரை ஆவினில் கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பணி நியமனம் செய்தவர்களை பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு செல்லும் என ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், முறைகேடான நியமனங்களை ரத்து செய்து அதற்கு காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த மூன்று மாவட்ட ஆவின்களிலும் முறைகேடு புகார்கள் குறித்து அந்தந்த மாவட்ட பொதுமேலாளர்கள் பொருளாதாரா குற்றப்பிரிவில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் மேலும் விருதுநகர், திருச்சி ஆவினில் பணிநியமனங்களை ரத்து செய்ய நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்