அமெரிக்காவில் குடும்ப தகராறு காரணமாக 3 பேர் சுட்டுக்கொலை

3 பேரை சுட்டுக்கொலை செய்துவிட்டு மற்றொரு நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Update: 2024-01-28 22:45 GMT

லாஸ் ஏஞ்சல்ஸ்,  

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ளது கிரனாடா ஹில்ஸ். இங்கு உள்ள லெட்டோ அவென்யூவில் ஒரு வீட்டில்  துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்பதாக போலீசாருக்கு அவசர அழைப்பு வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டின் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்ததில், 2 பெண்கள் உள்பட 4 பேர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு டாக்டர்கள் குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதன் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 3 பேரை சுட்டுக்கொலை செய்துவிட்டு மற்றொரு நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்