மெக்சிகோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒரு பெண் அதிகாரி உள்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
மெக்சிகோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் அதிகாரி உள்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.;
Image Courtesy : AFP
மெக்சிகோ சிட்டி,
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. அவர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர்.
இந்த நிலையில் மெக்சிகோவின் மேற்கு பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவத்தினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள அகாபுல்கோ-ஜிஹுவாடனெஜோ தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒரு பெண் அதிகாரி உள்பட 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இருவர் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.