ஐ.பி.எல். 2024: தொடக்க போட்டிகளை தவறவிடுகிறாரா ஸ்ரேயாஸ் ஐயர்?.. வெளியான தகவல்

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் தொடக்க போட்டிகளை ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-03-14 06:23 GMT

image courtesty:PTI

மும்பை,

ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐ.பி.எல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியின்போது அவருக்கு மீண்டும் முதுகு வலி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயத்தன்மை குறித்து எந்த வித தகவலும் வெளிவரவில்லை.

இதனால் அவர் ஐ.பி.எல். தொடரின் தொடக்க போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த வருடம் முதுகு வலி பிரச்சனை காரணமாக ஐ.பி.எல். தொடரை தவறவிட்ட அவர் அதற்காக சிகிச்சை மேற்கொள்ள லண்டன் சென்றார். அதன்பின் காயத்திலிருந்த மீண்ட அவர் 50 ஓவர் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாட மறுப்பதாக கூறி அவரை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து பி.சி.சி.ஐ. நீக்கியது.

இதனையடுத்து ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அவர் மும்பை அணியில் விளையாடினார். முதுகு வலி பிரச்சனை காரணமாக இறுதிப்போட்டியின் 4-வது நாளில் (நேற்று) பீல்டிங் செய்ய அவர் களத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசி நாளான இன்றும் அவர் களத்திற்கு வரவாய்ப்பில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்