ஜடேஜா அரைசதம்...சென்னை 176 ரன்கள் குவிப்பு

சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 57 ரன்கள் எடுத்தார்.

Update: 2024-04-19 15:46 GMT

Image Courtesy: AFP 

லக்னோ,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 34வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டம் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ரச்சின் ரவீந்திரா 0 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் கெய்க்வாட் 17 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து ரகானேவுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமா ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் ரகானே 36 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஷிவம் துபே 3 ரன், இம்பேக்ட் வீரர் சமீர் ரிஸ்வி 1 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ஜடேஜாவுடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார்.

ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஜடேஜா 34 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயீன் அலி 20 பந்தில் 30 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து தோனி களம் புகுந்தார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 57 ரன்னும், ரகானே 36 ரன்னும், மொயீன் அலி 30 ரன்னும், தோனி 9 பந்தில் 28 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்