டி20 உலகக்கோப்பை: விராட் கோலி தொடக்க ஆட்டக்காரரா..? அனைத்தும் பொய் - ரோகித் சர்மா

டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று செய்திகள் வெளியாகின.

Update: 2024-04-18 07:25 GMT

image courtesy: PTI

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.

இதற்கான இந்திய அணி இந்த மாத இறுதியில் தேர்வு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. முன்னதாக டி20 கிரிக்கெட்டில் சற்று குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் மெதுவாக விளையாடும் விராட் கோலியை டி20 உலகக்கோப்பையில் கழற்றி விட தேர்வுக்குழு முடிவெடுத்ததாக செய்திகள் வெளிவந்தன.

அந்த நிலையில் உலகக்கோப்பை இந்திய அணியின் தேர்வு பற்றி அஜித் அகர்கர் மற்றும் ராகுல் டிராவிட்டுடன், கேப்டன் ரோகித் சர்மா மீட்டிங் நடத்தியதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வலம் வருகின்றன. அதில் டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்திய அணியின் கேப்டன் மறுப்பு:

இந்நிலையில் அதை முற்றிலுமாக மறுக்கும் இந்திய அணியின் ரோகித் சர்மா அந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று கூறியுள்ளார். மேலும் உலகக் கோப்பை சம்மந்தமாக அஜித் அகர்கரை துபாயில் பார்க்கவில்லை என்றும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு;- "நான் யாரையும் சந்திக்கவில்லை. அஜித் அகர்கர் துபாயில் எங்கேயோ கோல்ப் விளையாடிக் கொண்டிருப்பார். ராகுல் டிராவிட் பெங்களூருவில் தம்முடைய குழந்தை விளையாடுவதை பார்த்துக் கொண்டிருப்பார். அவ்வளவுதான் விஷயம். உண்மையாக நாங்கள் யாரும் சந்திக்கவில்லை. இன்றைய காலகட்டத்தில் நான், ராகுல், அஜித் அல்லது பி.சி.சி.ஐ. சார்பில் யாரேனும் ஒருவர் கேமரா முன் வந்து பேசுவதை தவிர்த்து மற்ற அனைத்தும் பொய்யானவை''என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்