கன்னியாகுமரி: மருந்துவாழ் மலை ஜோதிலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
வளர்பிறை சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு 9 வகையான அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.;
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஜோதிலிங்கேஸ்வரர்
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயர மருந்துவாழ் மலை அமைந்து உள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது.
இந்த கோவிலில் ஆனி மாத வளர்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. எண்ணெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டு சர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார்.
பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் உள்ளிட்ட 9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.