ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்
ஆண்டாள் சூடிக்கொடுத்த 2 மாலைகளும் ‘சிகாமணி மாலைகள்’ என்று அழைக்கப்படுகின்றன.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமிக்கும், ஆனந்த நிலையத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மூலவர் ஏழுமலையானுக்கும் அணிவித்து அலங்கரிக்க, தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் நேற்று திருமலைக்கு வந்து சேர்ந்தன.
முதலில் திருமலையில் பேடிஆஞ்சநேயர் கோவில் அருகிலுள்ள பெரியஜீயர் சுவாமி மடத்தில் மாலைகள் கொண்டு வரப்பட்டன. அங்கு, திருமலை பெரியஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி ஆகியோர் முன்னிலையில் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பிறகு கோவிலின் நான்கு மாடவீதிகள் வழியாக மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு மூலவரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆண்டாள் சூடிக்கொடுத்த 2 மாலைகளும் ‘சிகாமணி மாலைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த மாலைகளை ஒரு பெரிய கூடையில் வைத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருமலைக்கு பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெரியாழ்வார் புஷ்ப கைங்கர்யம்
ஆண்டாள், பூதேவியின் அவதாரமாக கருதப்படுகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் மூலவரான ஆண்டாளுக்கு அணிவித்து அலங்கரிக்கப்பட்ட மாலைகளை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் கருடசேவை அன்று திருமலைக்குக் கொண்டு வந்து மூலவர் ஏழுமலையானுக்கும், உற்சவர் மலையப்பசாமிக்கும் அணிவித்து அலங்கரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள ரங்கமன்னார் கோவிலுக்கு ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார் புஷ்ப கைங்கர்யம் செய்ததாகவும், ஆண்டாள் ரங்கமன்னாரிடம் வைத்திருந்த பக்தியால், அவர் தன்னுடைய தந்தை கட்டிய மலர் மாலைகளை முதலில் தானே அணிந்து அழகு பார்த்தபின் பெருமாளுக்கு சமர்ப்பித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
இதை உணர்ந்த பெரியாழ்வார் தனது மகளை கண்டித்ததாகவும், பின்னர் ஆண்டாள் அணியாமல் அனுப்பிய மாலைகளை ரங்கமன்னார் ஏற்க மறுத்ததாகவும் புராணக் கதைகள் கூறுகின்றன.
திருமலையில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அதிகாரி சக்கரைஅம்மாள், திருப்பதி ஏழுமலையான் கோவில் துணை அதிகாரி லோகநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ஸ்தானாச்சாரியார் ரமேஷ் ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.