15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் - காதலன் உள்பட 5 பேர் கைது

ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி சிறுமியை அவரது காதலன் அழைத்துள்ளார்.;

Update:2025-06-02 11:16 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஏ.பி.எம்.சி. பகுதியில் 15 வயது சிறுமி ஒருவள் வசித்து வந்தாள். இவளும், அதேப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் அந்த சிறுவன், சிறுமியை காதகி மலைப்பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது சிறுவனின் நண்பர்கள் மேலும் 5 பேர் அங்கு வந்தனர்.

அப்போது சிறுவன் தனது நண்பர்களுடன் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அத்துடன் அதனை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி சிறுமியை மீண்டும் மலைப்பகுதிக்கு அழைத்து சென்று அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து நாங்கள் அழைக்கும்போது வர வேண்டும் என்றும், வராவிட்டாலும், இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினாலும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவில்லை.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலனான அந்த சிறுவன், சிறுமியை மீண்டும் அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளாள். இதனை கேட்டு அதிர்ந்து போன அவர்கள், இதுபற்றி ஏ.பி.எம்.சி. போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் காதலன் உள்பட 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் ஒரு சிறுவன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்