சத்தீஷ்காரில் 210 நக்சலைட்டுகள் சரண்; முதல்-மந்திரி வரவேற்பு
சரண் அடைந்த நக்சலைட்டுகள் ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.;
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலத்தில் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. அங்கு பஸ்தார் போன்ற பகுதிகள், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் ஆகும். சத்தீஷ்கார் மாநிலத்தில், நக்சலைட்டுகளை சரண் அடையச்செய்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் ‘பூனா மார்கம்’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் பஸ்தார் மாவட்ட தலைநகர் ஜக்தால்பூரில் நேற்று ஒரே நாளில் 210 நக்சலைட்டுகள், போலீஸ் மற்றும் துணை ராணுவப்படை அதிகாரிகள் முன்பு சரண் அடைந்தனர். அவர்களில் மத்திய குழு உறுப்பினர் ருபேஷ் உள்பட தலைவர்கள் முதல் கீழ்மட்ட உறுப்பினர்கள்வரை அடங்குவர். பெண்களும் உள்ளனர். சரண் அடைந்த நக்சலைட்டுகள் ஆயுதங்களையும் ஒப்படைத்தனர். 19 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 17 தானியங்கி துப்பாக்கிகள், 23 இன்சாஸ் துப்பாக்கிகள் உள்பட 153 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த 15-ந்தேதி 28 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர். எனவே, கடந்த 3 நாட்களில் மொத்தம் 238 பேர் சரண் அடைந்துள்ளனர். நக்சல் ஒழிப்பு நடவடிக்கை வரலாற்றில் அதிகம்பேர் சரண் அடைந்த நிகழ்ச்சி இதுதான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நக்சலைட்டுகள் சரண் அடைந்ததற்கு முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.