ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் 24-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;
புதுடெல்லி,
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி அவரது வீட்டிற்கு அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்துள்ளனர். 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் அரசியல்வாதிகளின் தொடர்பு உள்ளதால், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் 24-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு அரசு வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா அடங்கிய அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.