பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் 3ம் ஆண்டு கல்வி பயின்று வந்தார்.;
சண்டிகர்,
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியை சேர்ந்த இளம்பெண் பூமிகா (வயது 23). இவர் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் 3ம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். பூமிகா பல்கலைக்கழக விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்தார்.
இந்நிலையில், விடுதியில் திங்கட்கிழமை இரவு மற்றொரு மாணவியின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூமிகா பங்கேற்றார். அதன்பின்னர், விடுதியில் தனது அறைக்கு சென்ற அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பூமிகா தனது அறைக்கு சென்று வெகுநேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, அறை பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த மாணவிகள் இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் கூறினர். விரைந்து வந்த விடுதி காப்பாளர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்கு மாணவி பூமிகா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், பூமிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.