கரூர் சம்பவம் எதிரொலி; ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோவுக்கு தடை
ரோடு ஷோவில் கலந்து கொள்ள ஏராளமான தொண்டர்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் திரட்டி வருகின்றனர்.;
ஐதராபாத்,
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி நாளை அனகாப்பள்ளி மாவட்டம், நர்சி பட்டினம் மக்கவர பாலத்தில் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க உள்ளார். இதற்காக ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்கிறார்.
விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான ரோடு ஷோவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ரோடு ஷோவில் கலந்து கொள்ள ஏராளமான தொண்டர்களை திரட்டி வருகின்றனர்.ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோ நடத்தினால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தமிழ்நாடு மாநிலம் கரூரில் நடந்தது போல் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளதாக கூறி போலீசார் ரோடு ஷோவுக்கு தடை விதித்தனர்.
இதுகுறித்து அனகாப்பள்ளி மாவட்ட தலைவரும், முன்னாள் மந்திரியுமான அமர்நாத் ரெட்டி கூறுகையில்:- அரசு எத்தனை தடை விதித்தாலும் சாலை பயணம் தொடரும். யார் எங்களை தடுக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்வோம். போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் தரவில்லை. தகவலுக்காக கொடுத்து இருக்கிறோம் என்றார்.