ராகுல் காந்தி தலைமையில் நாளை பேரணி
ராகுல்காந்தி தலைமையில் நடைபெற உள்ள பேரணியில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 300 எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
FILEPIC
புதுடெல்லி,
வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக நாளை (ஆக.11) நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை ராகுல் காந்தி தலைமையில் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்களின் பேரணி நடைபெறுகிறது.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்லும் இந்த பேரணியில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 300 எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளனர். பேரணியின் முடிவில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களையும் அவர்கள் சந்திக்க உள்ளனர்.
இந்த பேரணி நாளை காலை 11:30 மணிக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களுக்கு இரவு விருந்து அளிப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024ஆம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு, மகாதேவபுரா சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப்பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பான ஆதாரங்களை புதுடெல்லியில் கடந்த ௭-ம் தேதி ராகுல் காந்தி வெளியிட்டார். மேலும், மக்களவைத் தேர்தலில் நடந்ததாக கூறப்படும் தேர்தல் மோசடியைக் கண்டித்து, பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் நேற்று முன் தினம் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதேநேரம், ராகுல்காந்தி வெளியிட்ட தரவுகள் தவறானவை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.