டெல்லி பயங்கரவாத தாக்குதல்: 3 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்காக 10 பேர் கொண்ட சிறப்புக்குழுவை என்.ஐ.ஏ. அமைத்துள்ளது.;

Update:2025-11-13 07:42 IST

ஸ்ரீநகர்,

நாட்டையே உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தீவிரமாக விசாரித்து வருகிறது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகளும், தடயவியல் சோதனை நிபுணர்களும் சென்று அங்குலம் அங்குலமாக தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த விசாரணைக்காக 10 பேர் கொண்ட சிறப்புக்குழுவை அமைத்துள்ளது. போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதற்கு மேலான பதவிகளில் உள்ள அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த குழு செயல்பட இருக்கிறது. இந்த சிறப்புக்குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

முன்னதாக காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமதுவுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அவ்வழக்கில் தேடப்பட்டு வந்த காஷ்மீர் டாக்டர் முசாமில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரது வாடகை வீட்டில் 360 கிலோ வெடிபொருட்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அவர் பரிதாபாத்தில் அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அவரைப்போல், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த மேலும் ஒரு டாக்டர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த கும்பலை சேர்ந்த பெண் டாக்டர் ஷாகீன், லக்னோவில் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இளைஞர்களை அடையாளம் கண்டு மூளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததும், நிதி திரட்டியதும், ஆயுதங்கள் கொள்முதல் செய்ததும்,வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில், இந்த கும்பலுக்கு உதவிய மவுலவி இஷ்தியாக் என்பவர் பிடிபட்டார். இவர் அரியானா மாநிலம் மேவாட்டை சேர்ந்தவர். காஷ்மீர் போலீசாரும், அரியானா போலீசாரும் இணைந்து நடத்திய தொடர் வேட்டையில் அவர் சிக்கினார். அவர் பயங்கரவாத தொடர்புக்கு மையப்புள்ளியாக திகழ்ந்த அல் பலாஹ் பல்கலைக்கழக வளாகத்தில் மத போதனைகள் நிகழ்ச்சி நடத்தி வந்தார்.

இவரது வாடகை வீட்டில்தான் 2,500 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை டாக்டர் முசாமிலும், டெல்லி கார் வெடிப்புக்கு முக்கிய காரணமான டாக்டர் உமரும் பதுக்கி வைத்திருந்தனர். அதற்கு மவுலவி இஷ்தியாக் உதவி செய்ததாக தெரியவந்துள்ளது. எனவே, அவரை விசாரணைக்காக ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. இவ்வழக்கில் பிடிபட்ட 9-வது நபர் இவர் ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்