மேகாலயாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்... மக்கள் அச்சம்
மேகாலயாவில் இன்று ரிக்டரில் 3.1 மற்றும் 2.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
ஷில்லாங்,
மேகாலயாவில் உள்ள கிழக்கு காரோ மலைப் பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.19 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.60 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 90.59 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக இன்று அதிகாலையில் ரிக்டர் 3.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.