தொடர்ந்து 2-வது நாளாக டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.;
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள துவாரகாவில் உள்ள பிரபல பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், எந்த நேரத்திலும் அது வெடிக்கும் என்றும் பள்ளிக்கு ஒரு இ மெயில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரையும் பள்ளியில் இருந்து வெளியேற்றியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உடன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதேபோல, வசந்த குஞ்ச், ஹாஸ்காஸ், பஷ்சிம் விஹார், லோதி எஸ்டேட் ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் சென்ற போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் சோதனை நடத்தியதில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரே நாளில் அடுத்தடுத்து 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றும் இதேபோன்று டெல்லியில் உள்ள 2 பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பின்னர் சோதனையில் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது. தொடர்ந்து 2-வது நாளாக டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.