உத்தர பிரதேசம்: இரண்டு பைக்குகள் மோதியதில் 5 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் திருமணத்திற்கு சென்றுவிட்டு இளைஞர்கள் 4 பேர் பைக்கில் வீடு திரும்பினர். அப்போது மற்றொரு பைக்கில் இரண்டு பேர் அதே சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் எதிர்பாராதவிதமாக இரண்டு பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சயான் பகுதியை சேர்ந்த பகவான் தாஸ் (35), வக்கீல் (35), ராம் ஸ்வரூ (28) மற்றும் சோனு ஆகிய 4 பேருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடலையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கரண்(17) என்பவரும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.