துணை ஜனாதிபதி தேர்தல்; தேசிய கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து
இந்திய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதி நடத்தப்படும்.;
புதுடெல்லி,
நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக இருந்து வந்த ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிதாக துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதி நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மராட்டிய மாநில கவர்னர் மற்றும் தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியான 'இந்தியா' கூட்டணி சார்பில் வேட்பாளராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் நாளான செப்டம்பர் 9-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 6 மணிக்கே வாக்குகள் எண்ணப்பட்டு, இரவு 7.30 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். இந்த தேர்தலில் வேட்பாளர் 50 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.
சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால், இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்பார். இந்நிலையில், தேர்தலுக்கு முந்தின நாளான செப்டம்பர் 8-ந்தேதி தேசிய கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்க இருக்கிறார். அப்போது, அவர்களுடன் உரையாடவும் இருக்கிறார்.
இதுபற்றி கூட்டணியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒற்றுமையை வலுப்படுத்தவும் மற்றும் பிணைப்புகளை வளர்க்கவும் இதுபோன்ற உரையாடல்கள் எப்போதும் பலனளிக்கும் என கடந்த கால நிகழ்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன என்று கூறியுள்ளார்.