4 பிள்ளைகளுடன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
கிரண் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தது தெரியவந்துள்ளது.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டம் பல்வாஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் கிரண் (வயது 35). இவருக்கு திருமணமாகி சுமித் (வயது 18) , ஆயுஷ் (வயது 4), ஆவேஷ் (வயது 3) என 3 மகன்களும், சினேகா (வயது 13) என்ற மகளும் என மொத்தம் 4 பிள்ளைகள் இருந்தனர்.
இதனிடையே, கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த கிரண் பிள்ளைகளுடன் பல்வாஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியே வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கிரண் மற்றும் அவரது பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவரது வீடு பூட்டியே கிடந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டில் கிரண் மற்றும் அவரது 4 பிள்ளைகளும் சடலமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். கிரணும் அவரது 4 பிள்ளைகளும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.இதையடுத்து 5 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 4 குழந்தைகளுடன் தனியே வசித்து வந்த கிரண் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.