நாளொன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை உயர்த்திட மத்திய அரசு குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-28 21:26 IST

சென்னை,

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருமுறை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி நெல் கொள்முதல் பற்றி விரிவான அறிக்கையையும் வெளியிட்டிருந்தார்கள்.

* வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை!

* உரிய காலத்தில் காவிரி நீர் திறப்பு!

* இரண்டரை இலட்சம் விவசாயிகளுக்குப் புதிய இலவச பம்ப்செட் இணைப்புகள்!

* தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகையுடன் நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ. 2545/- பொதுரகத்திற்கு ரூ. 2500/-!

* வரலாறு கண்டிராத குறுவை சாகுபடி 6.13 இலட்சம் ஏக்கர்!

* நெல் கொள்முதல் பருவம் அக்டோபர் முதல் நாளுக்குப் பதிலாக செப்டம்பர் முதல் நாளிலிருந்து நெல் கொள்முதல் செய்ய பிரதமர் மோடியிடம் கடிதம் எழுதி மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று கடந்த நான்காண்டுகளாக நெல்லைப் பெருமளவில் மழையிலிருந்து காத்தது நம்முடைய முதல்-அமைச்சர்.

* 576.2 கோடி ரூபாயில் வேளாண் இயந்திரங்கள்!

* வேளாண் வளர்ச்சி 5.66 சதவீதம்

* நெல் சேமித்திட 4.03 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையிட்ட சேமிப்புத் தளங்கள் புதிதாகக் கட்டப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன!

* 3.40 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவில் புதிய மேற்கூரையிட்ட சேமிப்புத் தளங்கள் கட்டப்பட உள்ளன.

* 2011 - 2021 வரை 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் நெல் கொள்முதல் செய்யப்பட்டதை விட 54 மாதங்களில் தி.மு.க ஆட்சியில் 16 லட்சம் டன் நெல் அதிக கொள்முதல் செய்யப்பட்டது.

* ஈரப்பதத்தை உயர்த்திட மத்திய அரசு குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.

* 24.10.2025 ஒரே நாளில் ரெயில்கள் மூலம் 21,000 மெட்ரிக் டன் நெல் நகர்வு செய்யப்பட்டது வரலாற்றுச் சாதனையாகும்.

* கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டே கால் மடங்கு அதிகம் ரெயில்கள் மூலம் நகர்வு.

அனைத்து வகைகளிலும் வேளாண் பெருங்குடி மக்களுக்குப் பணியாற்றி குறிப்பாக மண்ணின் மைந்தர் என்ற வகையில் டெல்டா விவாசயிகளுக்கு அரும்பணியாற்றி வரும் நம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சர்களுக்கெல்லாம் முதல்-அமைச்சர் என இந்தியத் திருநாடே பாரட்டி வருகிறது.

2020-2021 குறுவைப் பருவம் முழுமைக்கும் சேர்ந்தே 5.74 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் நம் தலைவரின் ஆட்சியில் 2025 - 2026 குறுவைப் பருவத்தில் 58 நாட்களில் மட்டும் 11.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறையின் மதிப்பீட்டின்படி செப்டம்பர் மற்றும் அக்டோபரில் 11.07 லட்சம் டன் நெல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 28.10.2025 பிற்பகல் வரை 11.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1872 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேல் நெல் கொள்முதல் செய்வதையும் டெல்டா மாவட்டங்களிலிருந்து ரெயில் வேகன்கள் மற்றும் லாரிகள் மூலமாக அதை மற்ற மாவட்டங்களுக்கு நகர்வு செய்யப்பட்டு வருவதையும் அறிந்து கொள்ளாமல் சில அரசியல் கட்சித் தலைவர்களும், நிலைமையின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளாத சிலரும் தேவையின்றிக் குறை கூறி வருகின்றனர்.

நெல் கொள்முதலில் சிரத்தையுடன் செய்யும் கழக அரசு பணிகள் பற்றி நெல் விவசாயிகளுக்கு, குறிப்பாக டெல்டா விவசாயிகளுக்கு நன்கு தெரியும். ஆதலால் தேவையற்ற குறைகளைக் கூறாமல் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினால் சிறப்பாக இருக்கும். “போற்றுபவர் போற்றட்டும்; புழுதுவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; என் கடன் பணி செய்வதே” என்ற உணர்வோடு முதல்-அமைச்சர் தலைமையில் நெல் கொள்முதல் உள்ளிட்ட மக்கள் பணிகளைத் தொய்வின்றிச் செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்