ஆவின் நெய் விலை உயர்வு: திமுகவின் நாடகம் அம்பலம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
எந்த அரசும் இந்த அளவுக்கு பால்பொருள் விலையை உயர்த்தாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்;
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகளை ஐந்தாம் முறையாக உயர்த்தியிருக்கிறது. ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை நடைமுறைப்படுத்தத் தவறியதால் மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்துவதற்காக தள்ளுபடி நாடகத்தை அரங்கேற்றிய திமுக அரசு, இப்போது அந்த நாடகத்திற்கும் மூடுவிழா நடத்தியுள்ளதன் விளைவு தான் இந்த விலை ஏற்றம் ஆகும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்த வேண்டிய அரசு, அதற்கு எதிராக நாடகம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.
ஆவின் நிறுவனம் அதன் தயாரிப்பான நெய்யின் விலையை அரை கிலோவுக்கு ரூ.20, கிலோவுக்கு ரூ.40, 5 கிலோவுக்கு ரூ.350, 15 கிலோவுக்கு ரூ.1155 வீதம் நேற்று முதல் உயர்த்தியுள்ளது. அதேபோல், ஆவின் பன்னீர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் நெய், பன்னீர் ஆகிய பொருள்களுக்கு வழங்கப்பட்டு வந்த தள்ளுபடி இப்போது திரும்பப் பெறப்பட்டிருப்பதன் மூலம் தான் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது அப்பட்டமான நாடகம். இந்த ஏமாற்று வேலையை மக்கள் நம்பமாட்டார்கள்.
உண்மையில் திமுக அரசு ஆவின் நெய்யுக்கும், பன்னீருக்கும் தள்ளுபடி வழங்கவும் இல்லை; அதை திரும்பப் பெறவும் இல்லை. மாறாக, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை செயல்படுத்தாமல் இருப்பதற்காக செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவம்பர் 30&ஆம் தேதி வரை நடத்தி வந்த ஏமாற்று நாடகத்தை இப்போது திமுக அரசு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக பால் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 12 விழுக்காட்டில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டது. அதன்படி குஜராத் அமுல், கர்நாடகம் நந்தினி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் பால் பொருள்களின் விலையை குறைத்த நிலையில், ஆவின் மட்டும் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை நடைமுறைப்படுத்தவில்லை.
அப்போதே திமுக அரசின் இந்த துரோகத்தை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டேன். ‘‘ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட போது அதைக் காரணம் காட்டி பால் பொருள்களின் விலைகளை உயர்த்திய தமிழக அரசு, வரிகள் குறையும் போது விலையைக் குறைப்பது தான் அறம். ஆனால், அறத்திற்கும் திமுகவுக்கும் இடைவெளி மிகவும் அதிகம். ஆவின் பால் பொருள்களை பயன்படுத்தும் மக்கள் ஏழைகள் தான். அவர்களைச் சுரண்டி பிழைப்பது மனிதநேயமற்ற செயலாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலைகளை அரசு குறைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினேன். அதன் பிறகு தான் திமுக அரசு தள்ளுபடி வழங்கும் நாடகத்தை அரங்கேற்றியது.
ஜி.எஸ்.டி வரிவிகிதக் குறைப்பின் அடிப்படையில் எந்த அளவுக்கு விலையை குறைக்க வேண்டுமோ, அதே தொகையை நெய்யுக்கும், பன்னீருக்கும் மட்டும் நவம்பர் 30&ஆம் தேதி வரை தள்ளுபடியாக வழங்குவதாக ஆவின் அறிவித்தது. அதுவும் கூட பிற பால் பொருள்களுக்கு வழங்கப்படவில்லை. திமுக அரசின் இந்த நடவடிக்கையும் மக்களை ஏமாற்றும் நாடகம் தான் என்று விமர்சித்திருந்த நான்,‘‘நவம்பர் மாதத்துடன் இந்த தள்ளுபடி ரத்து செய்யப்படும் போது, திசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்த்தப்படும். திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும்’’ என்று குற்றஞ்சாட்டியிருந்தேன். இரு மாதங்களுக்கு முன் நான் என்ன கூறியிருந்தேனோ, அது தான் இப்போது நடந்திருக்கிறது. திமுக முகமூடி கிழிந்திருக்கிறது.
நெய்யுக்கும், பன்னீருக்கும் வழங்கி வந்த தள்ளுபடியை திமுக அரசு திரும்பப் பெற்றிருப்பதன் மூலம் ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு முன் நெய், பன்னீர் ஆகியவை என்ன விலைக்கு விற்கப்பட்டனவோ, அதே விலை மீண்டும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஜி.எஸ்.டி வரிக்குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் திருட்டுத்தனங்களை செய்து திமுக அரசு ஏமாற்றியிருக்கிறது. பொதுவாக பேராசை பிடித்த தனியார் வணிக நிறுவனங்கள் தான் இத்தகைய மோசடிகளை செய்யும். ஆனால், அத்தகைய மோசடிகளை கண்டுபிடித்து தடுக்க வேண்டிய திமுக அரசே, ஜி.எஸ்.டி வரிகுறைப்பை வழங்காமல் மொசடி செய்வதை மன்னிக்க முடியாது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.515 ஆக இருந்த ஒரு கிலோ நெய்யின் விலை 2023 ஆம் ஆண்டுக்குள் ரூ.185 உயர்த்தப்பட்டு, ரூ.700 ஆக உயர்ந்தது. இப்போது ஜி.எஸ்.டி வரிக்குறைப்பின் மூலம் வழங்கப்பட வேண்டிய 40 ரூபாயை வழங்காமல் இருப்பதன் மூலம் ஆவின் நெய் விலை 5 கட்டங்களாக ரூ.225 உயர்த்தப்பட்டுள்ளது. இது 44% உயர்வு ஆகும். மனசாட்சி உள்ள எந்த அரசும் இந்த அளவுக்கு பால்பொருள் விலையை உயர்த்தாது.
திமுக அரசுக்கு மக்கள் நலனில் ஒருபோதும் அக்கறை இருந்ததில்லை. அதனால் தான் ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டண உயர்வு, 175% வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, வாகன வரி உயர்வு, நிலங்களின் வழிகாட்டி மதிப்பு மறைமுகமாக உயர்வு என அடுக்கடுக்காக மக்கள் மீது சுமைகளை சுமத்தியது. அவற்றின் தொடர்ச்சியாக இப்போது உயர்த்தப்பட்டுள்ள ஆவின் நெய் விலையை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் அளிக்கும் தண்டனையிலிருந்து திமுக தப்ப முடியாது. என தெரிவித்துள்ளார்.