அஜித்குமார் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது .;
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த கொலை வழக்கினை முறையாக விசாரணை நடத்தி வருகிற 20-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே கெடு விதித்திருந்தது. இதனால் அந்த தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளில் சி.பி.ஐ. தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இதனிடையே அஜித் குமார் கொலை வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவல் கடந்த 13-ம் தேதியுடன் முடிவடைந்தநிலையில், அவர்களுக்கான நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து மதுரை தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக, ஐகோர்ட்டு மதுரை கிளையில் சிபிஐ இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் பேராசிரியை நிகிதாவின் கார், பார்க்கிங்கை விட்டு வெளியே செல்லாதது, நகை திருட்டு சம்பவம் உண்மையிலேயே நடந்ததா என்பது உள்ளிட்ட விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.