அதிமுக விவகாரத்தில் அமித்ஷா தலையீடு இல்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவில் நான், பாஜகவில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;
சேலம்,
டெல்லி பயணம், அமித்ஷாவுடன் சந்திப்பு உள்ளிட்டவை குறித்து சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
வெளிப்படையாக அறிவித்துவிட்டே உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தேன். துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். டெல்லியில் உள்துறை மந்திரியுடனான சந்திப்பு வெளிப்படையானது. அரசு காரில் போய் தான் சந்தித்தேன்.முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். என் எழுச்சிப் பயணம் சிறப்பாக இருந்ததாக அமித்ஷா பாராட்டினார். அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து அவரிடம் நான் பேசவில்லை. அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டேன் என அமித் ஷா ஏற்கெனவே கூறிவிட்டார்.
முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு எள் முனை அளவும் கிடையாது. காரில் வெளியே வரும்போது என் முகத்தை துடைத்தேன்.இதனை அரசியல் செய்தது வேதனை அளிக்கிறது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததாலே 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுக்க முடிந்தது. நான் முதல்-அமைச்சராக இருக்கும்போது மத்திய அரசிடம் பேசி ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினேன். கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவில் நான், பாஜகவில் அமித்ஷா கூறுவது தான் இறுதி.
அதிமுகவில் கட்சி கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் தொடர்பு வைத்திருந்தால் நடவடிக்கை பாயும் என்பதே சிறப்பு தீர்மானம். அதிமுக சிறப்பு தீர்மானத்தின் படி செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர் தினகரன். 10 ஆண்டுகள் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார்.
என்னை முகமூடி அணிந்து சென்றதாக தினகரன் கடுமையாக விமர்சனம் செய்கிறார். டிடிவி தினகரன் தான் முகமூடி அணிந்து கூட்டணிக்குள் வர முயற்சிக்கிறார். பாஜக கூட்டணியில் இருந்து தினகரன் வெளியேறிய நோக்கம் எனக்கு தெரியாது.
திமுக முப்பெரும் விழாவில் இன்று செந்தில் பாலாஜியை பாராட்டும் இதே முதல்-அமைச்சர்தான், எதிர்க்கட்சியாக இருந்தபோது, 'செந்தில் பாலாஜியும் அவர் தம்பியும் கொள்ளை, கடத்தல் என கரூரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்' என்று கூறியுள்ளார். இப்போது மட்டும் அவர் புனிதமாகிவிட்டாரா என்ன? அன்று ஊழல்வாதி என கூறிவிட்டு, இன்று அமைச்சர் பதவி கொடுத்தது எப்படி? (செந்தில் பாலாஜியை முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்த வீடியோவை தற்போது காண்பித்தார்)
"இதே ஸ்டாலின் நான் பெரும்பான்மையை நிரூபித்தபோது, சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்தார். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்தான் இப்படி செய்வார்கள். அப்படிப்பட்ட நிலையில் வந்தவர், இன்று இப்படி பேசுவதை ஏற்க முடியாது . திமுக எம்.எல்.ஏ. மருத்துவமனையில் கிட்னி முறைகேடு போன்ற தீவிர பிரச்சினைகள் நிலவி வரும் சூழ்நிலையில், நான் முகத்தை மூடியதா பிரச்சினை?
ரகுபதி அவர்கள் எங்களிடம் விசுவாசத்தை பற்றி பேசுகிறார். விசுவாசம் என்ற என்ன விலை என்ன எனக் கேட்பவர்தானே நீங்கள். எம்.ஜி.ஆரால் எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டு, அம்மா-வால் அமைச்சராக்கப்பட்ட நீங்கள், திமுக-வில் சேர்ந்துவிட்டு இவ்வாறு பேசுவதை ஏற்க முடியாது.
பிரதமர் சென்னை வந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்து கருப்பு கொடி காட்டினார். முதல்-அமைச்சரான பின் பிரதமருக்கு, வெள்ளை கொடி காட்டியவர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் கட்சியில் சிலர், நாங்கள் 117 இடங்களில் போட்டியிடுவோம், ஆட்சி அதிகாரத்தில் இடம்பெறுவோம் என பேசி வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இருவேறு நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். திமுகவுக்கு எவ்வளவோ தீங்கிழைத்தது காங்கிரஸ். காங்கிரஸ் உடன் உறவு கொள்ளவில்லையா திமுக? ஒரு முதல்-அமைச்சர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார் இவ்வாறு பேசுவது அவருக்கு அழகல்ல. எங்களை பற்றி விமர்சிக்க ஒன்றுமில்லாததால் எதை பேசுவது என்று தெரியாமல் முதல்-அமைச்சர் விமர்சனம் செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.