பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம் - ராமதாஸ் அறிவிப்பு

கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.;

Update:2025-09-11 10:32 IST

விழுப்புரம்,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையேயான கருத்து மோதல் இன்னும் நீடித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த மாதம் 17-ந் தேதி ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு அவர் 31-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து கடந்த 4-ந் தேதி தைலாபுரத்தில் பா.ம.க. மாநில நிர்வாக குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு அவர் வருகிற 10-ந் தேதிக்குள் (அதாவது நேற்று) உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றால், அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கெடு நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க காலக்கெடு வழங்கப்பட்டது. இருப்பினும் 16 குற்றச்சாட்டுகள் குறித்து பதில் கூறாததால், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானது, சரியானது என்று உறுதி செய்யப்படுகிறது. அன்புமணியின் செயல்கள் தலைமைக்கு கட்டுப்படாத வகையில் உள்ளன. அரசியல்வாதி என்ற தகுதி அற்றவராக அவர் செயல்பட்டார்.

இதனால் பா.ம.க. செயல்தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பா.ம.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சி விதிகளின்படி நிறைய வாய்ப்புகள் கொடுத்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூத்தோர் சொல் எதையுமே அன்புமணி கேட்கவில்லை. பல்வேறு தரப்பினர் அறிவுரை கூறினாலும் ஏற்கும் நிலையில் அன்புமணி இல்லை. மிகவும் போராடி பா.ம.க.வை வளர்த்தேன். கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அன்புமணிக்கு இல்லை. அன்புமணி வேண்டுமானால் தனிக்கட்சி தொடங்கட்டும்.”

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்