நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்? - முதல்-அமைச்சரின் கேள்விகளுக்கு அண்ணாமலை பதிலடி

இயற்கை பேரிடர்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துவிட்டது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.;

Update:2026-01-23 13:44 IST

கோப்புப்படம் 

பிரதம் மோடிக்கு கேள்விகள் கேட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அந்த பதிவுக்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10 சதவீதத்தை கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே,

சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் ஒரு அங்கமான பிஎம் ஶ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்?

Delimitation-ல் தென் மாநிலங்களில் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே தெரிவித்துவிட்டார். உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்குமா இல்லை?

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, கவர்னர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் நிர்வாகத் தோல்விக்கு கவர்னரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்?

100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று நீங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் இருக்கிறீர்கள். மத்திய அரசு தற்போது அதனை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. இனிமேலும் அத்திட்டத்தில் உங்கள் கட்சியினரால் ஊழல் செய்ய முடியாது என்ற இயலாமை, உங்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது.

எய்ம்ஸ் கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைவயலுக்குதான் நீங்கள் போகவில்லை. மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே? உங்களை யார் தடுத்தார்கள்? நீங்கள் விரும்பவில்லை என்றாலும், இந்த வருடம் மதுரை எய்ம்ஸ், மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி நினைவில் இருக்கா? குறைந்தபட்சம் ஒரு செங்கல்லாவது வைத்தீர்களா?

இயற்கை பேரிடர்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துவிட்டது. 5,000 கோடி ரூபாய் செலவு செய்தும், வருடந்தோறும் சென்னையை வெள்ளக்காடாக மாற்றுவதே உங்கள் சாதனை.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு வேண்டுமென்றே உங்கள் அரசு தவறான DPR-ஐ வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? திருத்தம் செய்யப்பட்ட DPR-ஐ மீண்டும் சமர்ப்பிக்க எண்ணம் இருக்கிறதா இல்லையா?

கீழடி ஆய்வறிக்கை, உலகளாவிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால், மேலும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்கிறது மத்திய அரசு. அந்த ஆதாரங்களைக் கொடுக்க என்ன தயக்கம் உங்கள் அரசுக்கு?

நீட் தேர்வை, தமிழக மக்கள் எதிர்க்கவில்லை. ஏழை, எளிய மாணவர்களுக்கு, நீட் ஒரு வரப்பிரசாதம் என்பதை, ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் இணையும் எளிய பின்புலம் கொண்ட பெற்றோர்கள் கூறுவார்கள். மருத்துவக் கல்வி இடங்களை விற்று, இத்தனை ஆண்டு காலம் பல கோடி சம்பாதித்த திமுக கும்பலுக்கு மட்டுமே நீட் தேர்வு கசக்கிறது.

ஒரு காலத்தில், தங்களுக்குப் பிடிக்காதவர்கள் குறித்து, பொதுக்கழிவறைகளில் கரித்துண்டால் எழுதி அற்ப சந்தோஷப்படும் மோசமான பழக்கத்தை, ஏ.ஐ. காலத்திலும் தொடராதீர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே. இனியாவது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்