பா.ஜ.க. - அ.தி.மு.க. சந்தர்ப்பவாத கூட்டணி: குற்றம் சாட்டிய எம்.ஏ.பேபி
மதச்சார்ப்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளை தமிழகத்தில் திமுக ஓரணியில் திரட்டி உள்ளதாக எம்.ஏ.பேபி தெரிவித்தார்.;
சென்னை,
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி சந்தித்து பேசினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை எங்களது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோரோடு சந்தித்துப்பேசினேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. மதுரையில் அண்மையில் எங்களது கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு நடைபெற்று முடிந்தது. தமிழக மக்கள் மிகச் சிறப்பான ஆதரவை அளித்து மாநாட்டை வெற்றிபெறச் செய்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதற்கு இன்னும் 12 மாதகால அவகாசம் உள்ளது. அதே காலகட்டத்தில் கேரளாவிலும் மேற்குவங்கத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடை பெற உள்ளன. மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளின் தலைமையின் கீழ் தமிழக மக்களை அணிதிரட்ட நாங்கள் பணியாற்றி வருகிறோம். இத்தகைய அணி தான் மதவாத சக்திகளின் பேராபத்தை தடுத்து நிறுத்தமுடியும்.
இன்றைய சந்திப்பின்போது மதவாத சக்திகளை எதிர்த்து தமிழகத்தில் வலுவான அரசியல் அணியை ஏற்படுத்தியதற்காகவும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைவரையும் ஓரணியில் திரட்டியதற்காகவும் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் சிறப்பான பங்களிப்பிற்காக நாங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
தமிழகத்தில் திமுக மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு அனைத்து சக்திகளை ஓரணியில் திரட்டியதால் கடந்த கால தேர்தல்களில நல்ல முடிவுகள் கிடைத்தன. முக்கியமாக இந்த மாநிலத்தில் மதவாத சக்திகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக பாஜக இடையே சந்தர்ப்பவாத கூட்டணி ஏற்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். மதச்சார்பின்மை மீது திட்டமிட்டு தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமது நாட்டில், ஜனநாயக உரிமைகள் மீதும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மீதும் பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படும் நரேந்திரமோடி அரசு வலுவான தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது.
போராடும் மக்களின் உரிமைகளை பறித்துக்கொண்டிருக்கிறது. மோடி அரசு வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. சிறுபான்மை மக்களின் உரிமைகள் மீது மோடி அரசு நடத்தி வரும் தாக்குதலுக்கு சமீபத்திய உதாரணம் இந்த மசோதா ஆகும். நாடாளுமன்றத்தில் அதிமுக இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது. அதேநேரம் இந்த மாநிலத்தில் அதிமுக பாஜகவுடன் கை கோர்த்துள்ளது. இது படுமோசமான சந்தர்ப்பவாதம் ஆகும்.
வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. மோடி அரசு சிறுபான்மை மக்கள் மீது நடத்திவரும் தாக்குதலுக்கு சமீபத்திய சரியான உதாரணம் இந்த மசோதா ஆகும். சுப்ரீம்கோர்ட்டு இந்த சட்டதிருத்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் அரசியல் சாசனத்தில் சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை மீறுவதாக உள்ளது என்று சுப்ரீம்கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
அதேநேரம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் அரசியல் சாசனத்திற்கு விரோதமான அணுகுமுறைகளை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடுத்து தமிழக அரசு வெற்றிபெற்றுள்ளதற்காக மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டோம். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பத்து மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் பல மாதங்கள் நிறுத்திவைத்துள்ளார். இந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு அரிதிலும் அரிதான தீர்ப்பை அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றம் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை எவ்வித காரணமும் இல்லாமல் நிறுத்தி வைக்க கவர்னருக்கு எந்த வித அதிகாரமும் இல்லை என்பதை சுப்ரீம்கோர்ட்டு தெளிவாக கூறிவிட்டது. இந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு அசாதாரணமான தீர்ப்பை வழங்கியுள்ளது முக்கியமானதாகும்.
கேரளா சட்டப்பேரவையில் மக்களுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அம்மாநிலத்தில் முன்பு இருந்த கவர்னர் நிறுத்திவைத்திருந்தார். எனவே மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை பொறுத்தவரை சில கவலைக்குறிய விஷயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கவர்னரின் ஏதேச்சதிகார நடவடிக்கையை சுப்ரீம்கோர்ட்டில் சட்ட ரீதியாக அணுகி அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளது. இன்றைய சந்திப்பின்போது முதல்-அமைச்சர் அவர்களுடன் எங்களுக்கு தோழமை ரீதியாக ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.