காரைக்குடியில் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை: கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பா.ஜ.க. நிர்வாகியை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தனர்.;

Update:2025-10-28 06:54 IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பொன்நகர் அல்லி அர்ஜுனா நகரை சேர்ந்த பழனியப்பன் (வயது 34), என்ஜினீயர். இவர் கட்டுமான தொழில் செய்து வந்தார். இவர் பா.ஜனதா சாக்கோட்டை ஒன்றிய துணை தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்தநிலையில் பழனியப்பன் பொன்நகர் பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகளை பார்வையிட மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு கும்பல் வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில் பயங்கர ஆயுதங்களால் பழனியப்பனை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

உயிருக்கு போராடிய பழனியப்பனை, உடனே காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பழனியப்பன் பரிதாபமாக இறந்தார்.

இந்த படுகொலை குறித்து அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்