1,500 அடி பள்ளத்தில் குதித்த கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு... காதல் தோல்வியால் விபரீதம்

காதல் தோல்வி அடைந்ததை முகமது அனாஸ் தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.;

Update:2025-09-21 03:29 IST

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் அபு முகமது சாஜிதன். இவரது மகன் முகமது அனாஸ் (வயது 18). இவர் குன்னூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் மாணவி, முகமது அனாசை காதலிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் காதல் தோல்வி அடைந்த முகமது அனாஸ் அதுபற்றி சில நாட்களாக தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 17-ந் தேதி முகமது அனாஸ் இன்ஸ்டாகிராம் மூலம் தனது நண்பர் மற்றும் காதலித்த மாணவிக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.

அதில் உயிர் வாழ பிடிக்கவில்லை என்றும், என்னுடைய பெற்றோரையும், பூனைக்குட்டியையும் நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள், நான் டைகர்ஹில்லில் உள்ள தேயிலை தோட்ட கழக எஸ்டேட் பகுதியில் இருக்கும் மரணப்பாறையில் குதித்து தற்கொலை செய்ய உள்ளதாக பதிவிட்டார். இது குறித்து மேல்குன்னூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று முகமது அனாசை தேடினர்.

அப்போது அங்கு ஒரு பையும், மதுபாட்டிலும் இருந்தன. இதனால் அவர் மதுகுடித்துவிட்டு 1,500 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அன்று இரவாகிவிட்டதால் அவரை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மறுநாள் தொடங்கி 3 நாட்களாக வெயில், மழைக்கு மத்தியில் முகமது அனாசை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்தநிலையில் 4-வது நாளான நேற்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் அவரது உடல் அடர்ந்த வனப்பகுதியின் ஒரு இடத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

போலீசார் விசாரணையில் காதல் தோல்வி காரணமாக முகமது அனாஸ் 1,500 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. தற்போது கடந்த 4 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்