வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லியில் மாநாடு - ஜவாஹிருல்லா அறிவிப்பு
வக்பு திருத்த சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி நவம்பர் 16-ந்தேதி மாநாடு நடத்த உள்ளதாக ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் வக்பு திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகளை மீறக்கூடியவற்றிற்கு கோர்ட்டு இடைக்கால தடை விதிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய வக்பு வாரியத்தில் அதிகபட்சம் 4 இஸ்லாமியர் அல்லாதவரும், மாநில வக்பு வாரியத்தில் 3 இஸ்லாமியர் அல்லாதவர்களும் நியமிக்கலாம் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டு உள்ளது அரசமைப்புக்கு எதிரானது. இந்து அல்லாதவர்கள் இந்து அறநிலையத்துறையில் உறுப்பினர்களாக ஆக முடியாது.
ஆனால் வக்பு வாரியத்தில் மட்டும் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினர்களாக இருக்கலாம் என்று சொல்வது பாரபட்சமானது. பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் பயன்பாட்டில் உள்ள தர்கா உள்ளிட்ட நிறுவனங்களை மன்னர்கள் மத வழிபாட்டுக்காக வழங்கினார்கள். அதற்கான ஆவணங்கள் இருக்காது. ஆனால் அந்த சொத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இடைகால தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. வக்பு திருத்த சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி நவம்பர் 16-ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாநாடு நடத்தவுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.