6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: தமிழக மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நோட்டீஸ்
6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.;
சென்னை,
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த மாதம் 6 குழந்தைகள் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தன. காய்ச்சல், சளி, இருமலால் அவதிப்பட்ட அந்த குழந்தைகளுக்கு டாக்டர்கள் பரிந்துரையின்படி, மருந்துகள் வழங்கப்பட்டன. அதன்பின்னர், சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழந்தன.
இதுகுறித்து மத்திய பிரதேச சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் மருந்து மற்றும் மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குனர் குருபாரதி தலைமையிலான குழுவினர் குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மருந்து உற்பத்தி உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குனர் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. அதற்கான விளக்கத்திற்குப்பின் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.