ஐடிஐ-களில் மாணவர் நேரடி சேர்க்கை கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
திருநெல்வேலியில் ஐடிஐ பயிற்சியில் ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185-ம், ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195-ம் நேரடியாக செலுத்தப்பட வேண்டும்.;
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஜடிஜ) நடப்பு ஆண்டில் மாணவர்கள் நேரடியாக சேர கால அவகாசம் 30.9.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான பேட்டை, ராதாபுரம் மற்றும் புதிதாக துவங்கப்பட்டு, இடையன்குடி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு எதிர்புறம் செயல்படும் திசையன்விளை அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இதுவரை பூர்த்தி செய்யப்பட்ட இடங்கள் நீங்கலாக, காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 30.9.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்சொன்ன ஐடிஐ-களில் சேர விரும்புபவர்கள் உரிய அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் நேரில் வருகை புரிந்து இந்த நேரடிச்சேர்க்கை மூலம் சேரலாம். மேலும் இந்த பயிற்சியில் ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185-ம் மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195-ம் நேரடியாக செலுத்தப்பட வேண்டும்.
இந்த நிலையத்தில் பயிற்சி பெறும் தகுதியுள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும் விலையில்லா மிதிவண்டி/ கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை/ ரெயில் பயண கட்டண சலுகை/ மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750 (வருகைக்கு ஏற்ப)/ சீருடை 2 செட் (தையற்கூலியுடன்) /மூடு காலணி 1 செட் / பாடப்புத்தகங்கள் /வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை/ இவற்றுடன் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு முடிய அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பெறும் ஆண்/ பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன்/ புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் கூடுதலாக ரூ.1000 உதவித்தொகை பெற்று வழங்கப்படும்.
இந்த வாய்ப்பினை 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுடைய +1/ +2/ பட்டய / பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற / தோல்வியடைந்த / இடைநின்ற மாணவ / மாணவியர் தொழிற்கல்வியினை பயின்று நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பினை தனியார்/ மத்திய / மாநில அரசு தொழில் நிறுவனங்களில் வளாகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்பினை பெற்று பயன் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 0462-2342005, 9499055791 ஆகிய எண்களுக்கும், ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 9965759121, 8610763264 ஆகிய எண்களுக்கும், திசையன்விளை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 8838473272, 9443462242 ஆகிய கைபேசி எண்களுக்கும் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.