தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ஆலோசனை
தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்கள் உட்பட 10 முதல் 15 மாநிலங்களில் பீகாரைப் போல முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது.
முன்னதாக, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பாக டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சரியான வாக்காளர்களை சேர்ப்பதற்கான பணி நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது. பீகாரில் முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. 2-ம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும்.
12 மாநிலங்களில் நவம்பர் 4-ம் தேதி முதல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கெடுப்பு துவங்கும். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு நாளை முதல் பயிற்சி அளிக்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் டிச.9ஆம் தேதி வெளியாகும். சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு 2026ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு மிக மிக அவசியம் - தேர்தல் ஆணையம். கடந்த 1951 முதல் 2004 வரை 8 முறை சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது 9-வது முறையாகும். 3 மாதங்களுக்கு வாக்காளர் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளது. வாக்காளர்களை உறுதி செய்ய 3 முறை தேர்தல் அதிகாரிகள் வீடுகளுக்கு வருவார்கள். எந்த ஒரு தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. இதற்கு ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்கள் பெறப்படும்.
தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ள 12 மாநிலங்களில் இன்று இரவு 12 மணியிலிருந்து முழுமையாக நிறுத்தி வைக்கப்படும். அதன்பின் வாக்காளர் பட்டியலில் எந்த மாற்றங்களும் செய்ய முடியாது. வாக்காளர் தீவிர திருத்தப்பட்டியல் பணிகள் முடிந்து வெளியாகும் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தான் 12 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது . இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 29ம் தேதி மாலை 4 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது.