திருச்சி சரக டி.ஐ.ஜி. குறித்து பேச சீமானுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவு
திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் குறித்து பேச சீமானுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்திருந்தது.;
கோப்புப்படம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் வருண்குமார் தாக்கல் செய்த வழக்கில், “தனக்கு எதிராக பொது வெளியில், ஆதாரம் இல்லாமல் சீமான் அவதூறாக பேசி வருகிறார். இதனால், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதால், தனக்கு எதிராக அவதூறான, ஆதாரமில்லாத கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்க வேண்டும். மானநஷ்ட ஈடாக 2 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்க சீமானுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் குறித்து பேச சீமானுக்கு இடைக்கால தடை விதித்தது. வருண்குமார் வழக்கிற்கு சீமான் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால், வழக்கை வருகிற அக்டோபர் 15-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை சீமானுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.