ஓபிஎஸ் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்
ஓ.பன்னீர்செல்வம் தொகுதிப் பிரச்சனைக்காக முதல்-அமைச்சரை சந்தித்திருக்கலாம் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.;
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 'அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என்ற அமைப்பை உருவாக்கி, தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய மந்திரி அமித்ஷா, அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தார்.
இந்த கூட்டணி வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளது. அதே நேரம் தாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வந்தார். இதற்கிடையே கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை, நேரில் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தி அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'நம்மை மதிக்காத பா.ஜ.க. கூட்டணியில் இனியும் இருக்கக்கூடாது' என்று நிர்வாகிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார். இதையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று 2 முறை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டுள்ளனர். வருகிற 26-ம் தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க வைப்பதாக பா.ஜ.க. நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பா.ஜ.க. நிர்வாகிகளின் வாக்குறுதியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-
கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்திடம் பலமுறை பேசினேன். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று அவரிடம் வலியுறுத்தினேன். பலமுறை பேசிய நிலையிலும் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். அவர் வெளியேறியதற்கு சொந்தப் பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை.
கூட்டணியில் இருந்து விலகியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். அவர் என்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க நான் ஏற்பாடு செய்திருப்பேன். இப்போதும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால் 26-ந்தேதி தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்.
ஓ.பன்னீர்செல்வம் தொகுதிப் பிரச்சனைக்காக முதல்-அமைச்சரை சந்தித்திருக்கலாம்; அல்லது சொந்த பிரச்சனைக்காக சந்தித்திருக்கலாம். ஒரு எம்.எல்.ஏவாக நான்கூட முதல்-அமைச்சரை சந்திக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.