திருவண்ணாமலையில் டிச.3-ம் தேதி கார்த்திகை தீபம்: டிஜிபி ஆய்வு
கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.;
திருவண்ணாமலை
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 21-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 24-ந் தேதி அதிகாலையில் சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக டிசம்பர் மாதம் 3-ந் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதால் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் டிசம்பர் 3ம் தேதி நடக்க உள்ள திருக்கார்த்திகை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை தலைவர் டி.ஜி.பி. வெங்கட்ராமன் ஆய்வு செய்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் நெரிசல் ஏற்படாமல் தடுப்பது, சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து சரக டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. உடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.